டேய் சக்தி வெளிய வாடா..
நாங்க எல்லாரும் வந்தாச்சு. நீ ஒருத்தன் தான் இன்னும் வரல..
சீக்கிரம் வாடா என்று குரு சக்தியின் வீட்டின் முன்பு நின்று சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறான்..
குருவுடன் விமல், நிர்மல், உஷா, பூர்ணிமா, சரண்யா, லோகேஷ் அனைவரும் நின்று கொண்டிருக்கின்றனர்..
அது சரி இவங்க எல்லாம் யாருன்னு தானே கேக்குறீங்க.. இவர்கள் அனைவரும் ஒரு குடியிருப்பு பகுதியில் வசிக்கக்கூடிய நண்பர்கள்.
அனைவரும் 7 , 8 வகுப்பு படிக்கும் மாணவர்கள்.. விடுமுறை நாட்கள் என்றால் அனைவருக்கும் கொண்டாட்டம்..
அனைவரும் தங்களுடைய மிதிவண்டியை எடுத்துக்கொண்டு அங்கே இருக்கக்கூடிய நூலகத்திற்கு செல்வார்கள்.. மைதானங்களில் சென்று விளையாடுவார்கள்.. மதிய உணவை அனைவரும் ஒன்றாக ஒரு வீட்டில் அமர்ந்து சாப்பிடுவார்கள்..
ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டாலே அவர்களுக்கு கொண்டாட்டம்தான்.. இன்றும் நூலகம் செல்வதற்காக தான் நண்பனை அழைக்க வந்திருக்கிறார்கள்.
நீண்ட நேரம் ஆகியும் சக்தி வெளியே வராமல் இருப்பதை பார்த்து குருவும் , விமலும் உள்ளே செல்கிறார்கள்..
அங்கே சக்தி மிகவும் மும்முரமாக கணினியில் ஏதோ ஒன்றை, பார்த்துக் கொண்டிருக்கிறான்..
டேய் சக்தி.. எங்கள அதிகம் கணினியை , அலைபேசியை பயன்படுத்தக் கூடாதுன்னு நீதான சொல்லுவ..நீயே இப்படி கணினி முன்னாடி வெறிச்சி பார்த்துகிட்டு உட்கார்ந்து இருக்க.. என்று சொல்லியபடி இருவரும் அவன் அருகில் செல்கிறார்கள். அவன் ஏதோ ஒரு காணொலியை தீவிரமாக பார்த்துக் கொண்டிருக்கிறான்..
இவர்களைப் பார்த்ததும், வாங்க டா..வாங்க... மன்னிக்கணும்.. இந்த காணொலியை பார்த்துட்டு இருந்ததில் தாமதமாயிருச்சு..
வாங்க நம்ம போகலாம்..ரொம்ப முக்கியமான விஷயம் ...
அதனால்தான் இவ்வளவு நேரம் பார்த்துட்டு இருந்தேன். என்ன விவரம்னு நூலகத்துக்கு போற வழியில சொல்றேன் என்று சொல்லிக்கொண்டு கணினியின் திரையை அணைத்துவிட்டு, நண்பர்களுடன் தன் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு நூலகம் நோக்கி செல்கிறான்..
அவனுடைய பள்ளியில் புவி வெப்பமடைதல் பற்றிய ஒரு பேச்சுப்போட்டி நடக்க இருப்பதாகவும், அதற்கான தரவுகளைத் தேடிக் கொண்டிருக்கும் பொழுது தான் இந்த காணொலியை பார்த்ததாகவும் சொல்கிறான். ‘கடைசி மரமும் வெட்டுண்டு’...இதுதான் அவனுக்கு கொடுக்கப்பட்ட பேச்சு போட்டியின் தலைப்பு..
அனைவரும் நூலகத்திற்கு சென்று அவர்கள் விருப்பப்பட்ட நூல்களை எடுத்து வாசிக்க ஆரம்பிக்கிறார்கள்..
சக்தியும் புவி வெப்பமடைதல் சார்ந்த நூல்களை எடுத்து வாசிக்கிறான்..
வாசிக்க வாசிக்க பசுமை குடில் விளைவு, பசுமை வாயுக்கள் போன்றவற்றைப் பற்றி அறிவதோடு, புவி வெப்பமடைதலுக்காக போராடிய கிரெட்டா துன்பர்க் என்ற ஒரு பெண்ணைப் பற்றியும் அறிந்து கொள்கிறான்.. தேவையான விவரங்களை எல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டு, அனைவரும் நூலகத்திலிருந்து வீட்டிற்கு கிளம்புகிறார்கள்.. சக்தி தான் படித்த விவரங்களை எல்லாம் நண்பர்களுடன் அவன் வீட்டில் அமர்ந்து பகிர்ந்து கொண்டிருக்கிறான்.. டேய், இந்த மரங்களை வெட்டுறதுனால தான் டா இவ்வளவு இவ்வளவு.. பாதிப்ப பூமிக்கு நாம தந்துகிட்டு இருக்கோம்.. அதனால நாமும் பாதிப்டைவோம் அப்படிங்கறது ஏன் பெரியவங்களுக்கு புரியவே இல்ல? என்று வருத்தத்துடன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறான். அனைவருக்கும் அவன் சொல்லும் விஷயங்களை கேட்டு கேட்க மனது பிசைகிறது.. சொல்ல முடியாத வேதனை.. சக்தி வந்துட்டியா... எல்லாருக்கும் மதிய உணவு தயார் பண்ணி வச்சு இருக்கேன். போய் சாப்பிடுங்க..நானும் அப்பாவும் குடியிருப்பு பகுதியில் ஒரு கூட்டம் நடைபெற இருக்கிறது அதுக்கு போயிட்டு வரோம் சரிங்கம்மா.. என்ன கூட்டம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாமா? ஒண்ணும் இல்ல கண்ணு.. நம்ம குடியிருப்பு பகுதியில, வாகனங்களை நிறுத்த இடம் பற்றாக்குறை இருக்குது..அதை பற்றி தான் பேசுவாங்க கண்ணு. சரிங்க அம்மா..நீங்க போங்க..நாங்களும் சாப்பிட்டு அந்த கூட்டத்துக்கு வரலாமா மா ? சரி கண்ணா..எல்லாரும் முதலில் சாப்பிட்டு வாங்க என்று சொல்லி விட்டு அவன் பெற்றோர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்று விடுகிறார்கள்.. இவர்களும் உணவருந்தி விட்டு என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக கூட்டம் நடக்கும் இடத்திற்கு செல்கிறார்கள்.. குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து வீட்டினரும் அங்கு குழுமி இருக்கிறார்கள்.. கூடவே குடியிருப்பு பகுதியின் பொறுப்பாளர்களும் அங்கே இருக்கிறார்கள்..
இவர்கள் பின்புறம் நின்று கொண்டு கூட்டத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
குடியிருப்பு பகுதியின் தலைவரிடம் என்ன சார்? எங்க வாகனங்களை நிறுத்த நீங்கள் ஒதுக்கி இருக்கும் பகுதி இடப் பற்றாக் குறையா இருக்குது.
சில வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லை என்று ஒருவர் பேச, ஆமாங்க நிறுத்த இடம் இல்லாம காம்பவுண்டுக்கு வெளியே நாங்க காரை நிறுத்திக்கிட்டு இருக்கோம்.
என் கார் 13 லட்ச ரூபாய் போட்டு வாங்கின காருங்க.. இப்ப நிறுத்த இடமில்லாம இருக்குதுங்க..வீடு வாங்கும் போது எல்லா வசதி பண்ணி தருவேன்னு தானே சொன்னீங்க.. இப்படி ஆளாளுக்கு பேசிக்கொண்டே போகிறார்கள்.. இருங்க இருங்க. ஆளாளுக்கு பேசாதீங்க...ஒரு வாரம் டைம் குடுங்க..எல்லாம் சரி பண்ணி விடலாம்.
இவ்வளவு நாளா சரி பண்ணாதத.. ஒரு வாரத்தில் எப்படி சரி பண்ணுவீங்க? என்று குரல் சத்தமாய் ஒலிக்கிறது..
இங்க பாருங்க அந்த வடக்கு பக்கம் இருக்கும் மதில் சுவர் ஓரமாக நிறைய மரங்கள் இருக்கு. அதை எல்லாம் வெட்டி அப்புறப்படுத்தி அந்த இடத்தை நான் ரெடி பண்ணி தரேன்..
அந்த பகுதியை வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்து விடலாம் என்று தலைவர் அவர்களை சமாதானப்படுத்த முயல்கிறார்..
நம்ம அதிகப்படியான தேவைகளுக்கு, மரங்களை வெட்டிக் கொண்டு இருக்கிறோம். இப்படியே மரங்களை வெட்டி வெட்டி நம்ம நாட்டையும் அடுத்த சோமாலியா ஆக்க போறீங்களா ஆக்ரோஷமாய் ஒரு குரல் அங்கே ஒலிக்கிறது.. அனைவரும் திடுக்கிட்டு திரும்பிப் பார்க்கிறார்கள்..
ஆம் அங்கு ஆக்ரோசமாய் ஒலித்த குரல் சக்தியின் குரல்... மரங்களை வெட்டக்கூடாது... வெட்ட நாங்க விட மாட்டோம் என்று மீண்டும் அவன் குரல் ஒலிக்கிறது.
ஏற்கனவே அவன் சொன்ன விஷயங்களை யோசித்துக் கொண்டிருந்த அவன் நண்பர்களும், ஆமாம்..
சக்தி சொல்றது ரொம்ப சரி..நாங்க மரங்களை வெட்ட விட மாட்டோம்..அவன் நண்பர்களின் குரல்களும் அவனோடு இணைகிறது.